பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடிக்கப் போகும் பிரம்மாண்ட வரலாற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பாகுபலி நாயகன்

‘ஈஸ்வர்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் பிரபாஸ், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல படங்கள் ஹிட் கொடுத்தாலும், ‘பாகுபலி’ படத்தின் மூலம் அவர் இந்திய அளவில் ஒரு முன்னணி நடிகராக விளங்குகிறார். ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் மெகா ஹிட்டானதை தொடர்ந்து, அவர் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளிவர தொடங்கியிருக்கின்றன. ‘பாகுபலி’ பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டாலும், கலவையான விமர்சனங்களையே பெற்றது. பல முன்னணி நடிகர், நடிகைகள் அப்படத்தில் நடித்திருந்தாலும், பெரிய அளவிலான வசூலை பெறவில்லை என்பது அனைவருக்கும் வருத்தம் அளித்தது. தற்போது ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்தில் நடித்து வரும் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

3டி படத்தில் பிரபாஸ்

‘ராதே ஷ்யாம்’ படத்தைத் தொடர்ந்து தீபிகா படுகோனே உடன் தனது 21வது படத்தை நடிக்க இருக்கிறார் பிரபாஸ். அப்படத்திற்கு பிறகு நடிக்கப் போகும் 22வது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘ஆதிபுருஷ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் பிரபாஸ். 3டி தொழில்நுட்பத்துடன் இப்படம் உருவாக உள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. ஓம் ராவத் இயக்கத்தில் ஹிந்தி மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் மற்ற மொழிகளிலும் டப் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பிரபாஸ், ஒவ்வொரு கேரக்டரும் சவால் நிறைந்தது என்றும் ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடிக்க தான் மிகவும் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here