பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை சுனைனா விளக்கம் அளித்துள்ளார்.

பிக் பாஸ்

மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்க இருக்கிறது. பொதுவாக இந்த நிகழ்ச்சி ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் வரை 100 நாட்களுக்கு நடத்தப்படும். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணத்தால் இந்த ஆண்டு அந்தப் பணிகள் தள்ளிப்போயின. தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த காரணத்தால், பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தலாமா? வேண்டாமா? என்கிற யோசனையிலும் இருந்த விஜய் டிவி வருகிற செப்டம்பர் மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல்கட்ட வேலைகளை தொடங்க தயாராகி வருகிறது.

நடிகை மறுப்பு

இந்நிலையில், பிக்பாஸ் 4வது சீசனில் நடிகைகள் அதுல்யா, சுனைனா, ரம்யா பாண்டியன் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளதாக சமூக வலைதலங்களில் தகவல் பரவி வந்தது. இந்த தகவலுக்கு நடிகை சுனைனா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றால் என்னுடைய படங்களை யார் முடித்து கொடுப்பது என யோசிக்கிறேன். நான் எப்போதும் எந்த ஒரு ரியாலிட்டி ஷோவிலும் பங்குபெற விரும்பியதில்லை” என அவர் கூறியுள்ளார்.
இதேபோல் நடிகை ரம்யா பாண்டியனும் பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்பதாக வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here