திருவள்ளுர், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவலாக மழை

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 4 செ.மீ. மழையும், பந்தலூர், அவலாஞ்சியில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் வரும் 19 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வடக்கு வங்கக்கடல், ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதிளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், தென் மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், கர்நாடகா முதல் குஜராத் கடலோரப் பகுதி வரை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 17ம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் அலை 2.5 முதல் 3.1 மீட்டர் வரை எழும்பக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய்ம் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here