தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 100% மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள் வெளியீடு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அசாதாரணமான சூழல் நிலவியதை தொடர்ந்து, இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. கொரோனாவால் தேர்வு ரத்தான நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையிலும், வருகைப்பதிவேட்டின் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 100% மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

100 சதவிகிதம் தேர்ச்சி

4,71,759 மாணவர்களும், 4,68,070 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்த 6,235 மாற்றுத்திறனாளிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52,741 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் சென்று மாணவ – மாணவிகள் தங்களுடைய மதிப்பெண் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 17ந் தேதி முதல் 21ந் தேதி வரை அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. மதிப்பெண் சார்ந்த குறை இருந்தால் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 17ந் தேதி முதல் 25ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here