பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தலைமறைவாகிவிட்டதாக பிகார் போலீசார் கூறியுள்ளனர்.

சோகத்தில் ஆழ்த்திய மரணம்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்தின் மரணம் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், திடீரென்று தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மரணத்திற்கான காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல், பல முன்னணி பிரபலங்களும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக மும்பை மற்றும் பாட்னா என இரு மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரியா மீது புகார்

இதனிடையே, சுஷாந்த்தின் தந்தை கே.கே. சிங் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்தார். மேலும் ரியா சுஷாந்த் சிங்கிடம் பண மோசடி செய்ததாகவும் அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள பாட்னா போலீசார், இந்த வழக்கு விசாரணைக்காக மும்பையில் ஏற்கனவே முகாமிட்டுள்ளனர். சுஷாந்த் மரண வழக்கில் பாட்னா போலீசாருக்கு மும்பை போலீசார் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், சுஷாந்த் வழக்கு தொடர்பான விசாரணைக்காக பாட்னா நகர காவல் கண்காணிப்பாளர் வினேய் திவாரி தலைமையிலான சிறப்பு போலீஸ் குழு மும்பை சென்றது. அப்போது மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவர்களை தனிமைப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைமறைவு

இந்நிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பீகார் அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. மேலும் பீகார் மாநிலம் பாட்னாவில் தன்மீது பதிவு செய்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி ரியா சக்ரபோர்த்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. மேலும் ரியாவைக் கைது செய்யத் தடை விதிக்கவும் மறுத்துவிட்டது. இதற்கிடையே ரியா சக்ரபோர்த்தி தலைமறைவாகிவிட்டதாக பீகார் மாநில டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே தெரிவித்துள்ளார். ‘ரியா சக்ரபோர்த்தி தங்களுடன் தொடர்பில் இல்லை என்றும் மும்பை போலீசாருடன் அவர் தொடர்பில் இருக்கிறாரா என்பது பற்றி தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here