தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இடி மின்னலுடன் கனமழை பெய்யும்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகடலோர தமிழக மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழையும், சேலம், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காவேரிபாக்கம், ஏற்காடு பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும், விழுப்புரத்தில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. ஆலங்காயம், தாமரைப்பாக்கம், சேத்பட் பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும், கடலூர் மாவட்டம் மீ. மாத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சுலங்குறிச்சியில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வாணியம்பாடி, ஊத்தங்கரை, போளூர், செம்பரம்பாக்கம், ஆலந்தபுரம் பகுதிகளில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், தென்மேற்கு, மத்திய அரபிக்கடல், கேரள, கர்நாடக கடல் பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த மற்றும் சூறாவளிக் காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here