தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடி மின்னலுடன் கனமழை பெய்யும்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்கள், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார், வால்பாறை பகுதிகளில் தலா 9 செ.மீ. மழையும், சின்கோனாவில் 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 7 செ.மீ. மழையும், கன்னியாகுமரி மாவட்டம் சித்தாரில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தோவாலா, சோலையார் பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும், உதகமண்டலம், குடவாசல், மேல் பவானி, கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம் பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெரியார், பெருங்கலூர், ஆர்.எஸ். மங்களம், மஹாபலிபுரம், தேக்கடி ஆகிய பகுதிகளில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here