நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மும்பை போலீஸ் உதவி செய்வதாக சுஷாந்த் வழக்கை கையாளும் வழக்கறிஞர் குற்றச்சாட்டியுள்ளார்.

சோகத்தில் ஆழ்த்திய மரணம்

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்தின் மரணம் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், திடீரென்று தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மரணத்திற்கான காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல், பல முன்னணி பிரபலங்களும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். சுஷாந்த் தற்கொலை தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா அரசியல்

சினிமா பின்புலம் உள்ள நடிகர், நடிகைகள் செய்யும் அரசியல் காரணமாக பலர் சினிமா வாய்ப்புகளை இழந்து வருவதாகவும், அதுபோலவே சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 6 மாதங்களில் 7 பட வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளான அவர், அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகவும், இந்த பிரச்சனை நீடித்துக் கொண்டே இருந்ததால் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ரசிகர்கள் முதல் முன்னணி சினிமா நட்சத்திரங்கள் வரை சுஷாந்தின் தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க சிபிஐக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ‘தில் பெச்சாரா’ திரைப்படம் கடந்த வாரம் ஆன்லைனில் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்தியாவில் அதிக ரேட்டிங் கிடைத்த படமாக ‘தில் பெச்சாரா’ திகழ்கிறது.

போலீஸ் உதவியா?

இந்நிலையில், சுஷாந்த் மரணம் தொடர்பாக அவரது தந்தை கே.கே. சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, சுஷாந்த்தின் காதலி ரியா சக்கரபோர்த்தி மீது தற்கொலைக்குத் துண்டுதல் உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரியாவிடம் பல மணி நேரம் விசாரித்த போலீசாரிடம் அவர் பல விஷயங்களை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், சுஷாந்த் சிங் மரண வழக்கில் வாதாடி வரும் வழக்கறிஞர், ரியாவுக்கு போலீசார் உதவி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதமே ரியா மீது சுஷாந்த் சிங் குடும்பத்தினர் வழக்கு தொடுத்துள்ளனர் என்றும் அவர் மீது மும்பையிலும் வழக்குப்பதிவு செய்ய முற்பட்ட போது அது நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார். தற்போது பீகார் போலீசார், மும்பை போலீஸ் கைப்பற்றிய பொருட்கள் மற்றும் ஆதரங்களுடன் விசாரணையை துவங்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இது ஒரு பக்கம் இருக்க, சுஷாந்தின் முன்னாள் காதலியான அங்கிதா உண்மை ஜெயிக்கும் என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here