பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சமைப்பதற்கு அனுமதி வழக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று சிறைத்துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதி குன்ஹா அளித்த சிறை தண்டனையை உறுதி செய்ததுடன், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா ரூ. 10 கோடியும் அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

மீண்டும் சர்ச்சை

ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், அவரை பற்றி பல்வேறு வதந்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில், முன்கூட்டியே சசிகலா விடுதலை ஆவதாக செய்திகள் வெளியே வர, அதனை சிறை நிர்வாகம் மறுத்தது. இந்நிலையில், சசிகலாவிற்கு சிறைக்குள் தனியாக சமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். சசிகலாவுக்கு சிறை உணவே வழங்கப்படுவதாகவும் தனியாக சமைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, சிறையில் சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டதாகவும், அதற்கு லஞ்சம் கொடுத்தாகவும் சசிகலா மீது ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here