கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மதுரை, விருதுநகர், நாமக்கல், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டடுள்ளது. வடகடலோர தமிழகம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

பரவலாக மழை

சென்னையை பொறுத்தவரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வேடசந்தூரில் 15 செ.மீ. மழையும், சோலையார், அம்முண்டி பகுதிகளில் தலா 14 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. திருப்பூரில் 13 செ.மீ. மழையும், வால்பாறை, சின்கோனா, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலா 10 செ.மீ. மழையும், மூலனூர், கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டாபுரம், பரமத்தியில் தலா 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வேலூரில் 8 செ.மீ. மழையும், கிருஷ்ணகிரி, சின்னகல்லார், காமாட்சிபுரம், முங்கில்துறைப்பட்டு, பொன்னை அணை தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு, லட்சத்தீவு, கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here