கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ள தங்கக் கடத்தல் விவகாரத்தில் நடிகை பூர்ணாவை பயன்படுத்த கடத்தல் கும்பல் திட்டமிட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

புயலைக் கிளப்பிய தங்கக் கடத்தல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, அந்தத் தூதரகத்தின் பெயருக்கு வந்த பார்சலைக் கடந்த மாதம் 30ம் தேதி சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதில் 30 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐக்கிய அரபு தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஷரீத் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதில், ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் அந்த பொருட்களுக்கு உரிமை கோரியவர்களில் ஒருவர் என்றும் சுங்கத்துறை வட்டராங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின. கேரள தலைமைச் செயலகத்தில் ஐ.டி. துறை ஆபரேஷனல் மேலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா, தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கியது கேரள அரசியலில் புயலைக் கிளப்பியது.

அதிரடி கைது

இந்த வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய விசாரணை முகமைக்கு மாற்றப்பட்டதையடுத்து தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் பெங்களூருவில் பதுங்கியிருந்த அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற தங்கக் கடத்தல் குறித்த ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

திடுக்கிடும் தகவல்

இந்த நிலையில், தங்கக் கடத்தல் விவகாரத்தில் நடிகை பூர்ணாவை பயன்படுத்த கடத்தல் கும்பல் திட்டமிட்டதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடத்தல் கும்பலின் பெரிய யுக்தியே, வெளிநாட்டு கலை விழாக்களுக்கு செல்லும் நட்சத்திரங்களைப் பயன்படுத்தி அவர்கள் வழியாக தங்கம் கடத்துவது தான். இது பலமுறை நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளதாக தெரிகிறது. சில வாரங்களுக்கு முன்பு நடிகை பூர்ணாவை ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுதொடர்பாக பூர்ணா புகார் அளித்தையடுத்து சிலரை போலீசார் கைது செய்தனர். இந்த கும்பலுக்கும், ஸ்வப்னா கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எனவே நடிகை பூர்ணாவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here