குஜராத் மாநில அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானி தனது நண்பர்களுடன் சேர்ந்து பெண் காவலர் சுனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி வைரலாகி வருகிறது.

அத்துமீறிய அமைச்சரின் மகன்

குஜராத் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானியின் நண்பர்கள் ஊரடங்கு விதிகளை மீறி சூரத் நகரில் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்துள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் சுனிதா, அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளார். இதனை அறிந்த அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானி சம்பவ இடத்திற்குச் சென்று, அந்த பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்றும் யாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன் எனவும் கடுமையாக கண்டித்துள்ளார்.

பெண் காவலர் இடமாற்றம்

அதன்பின்னர் அமைச்சரின் மகனும் பதிலுக்கு பெண் காவலரை எச்சரிக்க, அதற்கு அவர் உரிய பதிலை அளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமைச்சரின் மகனுக்கு எதிராகவும், சுனிதாவிற்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானியும், அவரது இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம் பெண் காவலர் சுனிதா காவல் தலைமையகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here