தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் போலிச் சான்றிதழ் மூலம் கேரள அரசுப் பணியில் சேர்ந்ததாகப் புகார் எழுந்தது குறித்து விசாரணை செய்யப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தங்கம் கடத்தல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, அந்தத் தூதரகத்தின் பெயருக்கு வந்த பார்சலைக் கடந்த மாதம் 30ம் தேதி சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதில் 30 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐக்கிய அரபு தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஷரீத் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதில், ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் அந்த பொருட்களுக்கு உரிமை கோரியவர்களில் ஒருவர் என்றும் சுங்கத்துறை வட்டராங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின. கேரள தலைமைச் செயலகத்தில் ஐ.டி. துறை ஆபரேஷனல் மேலாளராக பணிபுரியும் ஸ்வப்னா, தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்வப்னா சுரேஷ் கைது

தங்கக் கடத்தலில் சிக்கிய ஊழியரை காப்பாற்ற முயற்சிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய விசாரணை முகமைக்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷை கடந்த சில நாட்களாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடி வந்த நிலையில், நேற்று பெங்களூருவில் அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் சந்தீப் நாயர், பாசில் பரீத் ஆகியோரும் கைதாகினர்.

போராட்டம், தடியடி

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் இன்று கொச்சி நகருக்குள் அழைத்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், அவர்களுக்கு எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவா மருத்துவமனையில் முதல்கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். தங்கம் கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை அதிகாரிகள் அழைத்து வரும் போது, கேரளாவில் வழிநெடுகிலும் காங்கிரஸ் கட்சியினரும், பாஜகவினரும் மறியல் போராட்டங்களை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வாளையார் சோதனைச் சாவடிக்குள் அதிகாரிகள் அவர்களை அழைத்து வரும்போது, காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது. திருச்சூர் மாவட்டம் பலியக்கேராவிலும் இதேபோன்று காங்கிரஸ் தொண்டர்களும், பாஜகவினரும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

அடுத்தப் புகார்

இந்தச் சூழலில் கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிக்குச் சேர்வதற்காக ஸ்வப்னா சுரேஷ் அளித்த பட்டப்படிப்புச் சான்றிதழ் போலியானது என்ற புகார் எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வணிகவியல் படிப்பு முடித்ததாக ஸ்வப்னா சுரேஷ் சான்று அளித்திருந்தார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்வப்னா சுரேஷ் சான்றிதழில் குறிப்பிட்ட ஆண்டில் அவர் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை, சான்று பெறவில்லை, அது போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், போலிச் சான்று கொடுத்து தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிக்குச் சேர்ந்ததாக ஸ்வப்னா சுரேஷ் மீது புகார் எழுந்துள்ளது தொடர்பாக கேரள போலீஸார் விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிவித்தார். இந்தப் புகாரில் சட்டத்துக்கு உட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை வழக்கம்போல் செய்வார்கள் என்றும் அதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here