தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் 13-ந் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் மூடல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமான காரணத்தால் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமலும், எப்போது திறக்கப்படும் என தெரியாமலும் உள்ளது. எனவே தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தத் தொடங்கிவிட்டன.

ஆன்லைன் கல்வி

அந்த வகையில், அரசு பள்ளிகளிலும் வரும் 13-ந் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வரும் 13-ந் தேதி மூலம் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும் என்றும் பாடப்புத்தகங்களை வழங்கியவுடன் ஆன்லைன் கல்வித்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் எனவும் கூறினார். 12-ம் வகுப்பில் இறுதித் தேர்வு எழுதாத 34,482 மாணவர்களில் 718 மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான தேர்வு தேதியை முதல்வர் அறிவிப்பார் என்றும் அவர் கூறினார். இறுதித் தேர்வு முடிந்தவுடன் 4 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here