உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டதாக அவரது அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.

புரட்சி கலைஞர்

1978 ஆம் ஆண்டு இயக்குனர் ‘காஜா’ இயக்கத்தில் வெளிவந்த, ‘இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தில் முதன்முதலாக ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்தார் விஜயகாந்த். அதன்பிறகு 1979-ல் ‘ஓம்சக்தி’ மற்றும் 1980-ல் ‘தூரத்து இடிமுழக்கம்’ போன்ற படங்களில் நடித்தார். பின்னர் 1981 ஆம் ஆண்டு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல், விஜயகாந்த்தின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் ஒரு அதிரடி நாயகனாக தன் பெயரை பதிவு செய்த அவர், ‘மனக்கணக்கு’, ‘சிவப்பு மாலை’, ‘நீதி பிழைத்தது’, ‘பார்வையின் மறுபக்கம்’, ‘ஆட்டோ ராஜா’, ‘சாட்சி’, ‘துரை கல்யாணம்’, ‘நாளை உனது நாள்’, ‘100வது நாள்’, ‘ஊமை விழிகள்’ போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தார். ‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘சத்ரியன்’, ‘புலன் விசாரணை’ போன்ற திரைப்படங்களில் அற்புதமானக் கதாபத்திரங்களை ஏற்று நடித்து, குறுகிய காலத்துக்குள் 90க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். 1991 ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைபடத்தில் நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு 100வது படமாக மட்டுமல்லாமல், மாபெரும் வெற்றியையும் பெற்றது.

அரசியல் பயணம்

‘புரட்சிக் கலைஞர்’ எனவும் ‘கேப்டன்’ எனவும் அழைக்கப்படும் விஜயகாந்த், திரைப்படத்துறையில் ஒரு புகழ்ப்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், சிறந்த அரசியல்வாதியும் ஆவார். 2005 ஆம் ஆண்டு ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்னும் கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு 2006 ஆம் ஆண்டு விருத்தாசலம் தொகுதியிலும், 2011 ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் வெற்றிப்பெற்றார். தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார். ஒரு நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ்நாட்டு அரசியலில் தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி, குறுகிய காலத்திற்குள் மாபெரும் வெற்றிக்கண்டார்.

உடல் நிலையில் முன்னேற்றம்

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விஜயகாந்த், அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு மருத்துவம் பார்க்கும் அக்குபஞ்சர் டாக்டர் சங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், விஜயகாந்திற்கு 20 நாட்களாக அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் அறுபது நாள் சிகிச்சை மட்டும்தான் இருக்கிறது. சரியாக மூன்று மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். விஜயகாந்த்திற்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய் இருந்துள்ளது. அதனை ஆரம்பத்திலே கண்டுபிடிக்காமல் விட்டுள்ளனர். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வந்தனர். ஆனால் அவருக்கு நரம்பு ரீதியான பிரச்சனையை சரிசெய்ய முடியவில்லை.

மீண்டும் கம்பீரக்குரல்

இப்பொழுது விஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது. அவர் தெம்பாகவும், வலிமையாகவும் இருக்கிறார். கொரோனோவில் இருந்து பத்திரமாக இருக்க வேண்டும் என அனைவருக்கும் ஆலோசனை வழங்குகிறார். விஜயகாந்திற்கு வழங்கப்பட்டு வரும் மற்ற சிகிச்சை முறைகளை சிறிது சிறிதாக குறைத்துவிட்டோம். அக்குபஞ்சர் மருத்துவ முறை மட்டுமே எடுக்கப்படுகிறது. இதன்மூலம் முழுமையாக அவர் குணமடைவார். பள்ளி, கல்லூரி காலத்தில் பழகிய நண்பர்களின் நினைவுகள் எல்லாம் தற்போது என்னிடம் பகிர்ந்து கொண்டார். மீண்டும் நண்பர்களோடு சேர்ந்து மகிச்சியாக இருக்க அவர் விரும்புகிறார். இவ்வாறு அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here