சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் 5 காவலர்களை கைது செய்த சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அடுத்தடுத்த மரணம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி, அவரையும் அவரது தந்தை ஜெயராஜையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே, கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த பென்னிக்ஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த நிலையில், தந்தை ஜெயராஜூம் மரணம் அடைந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டினர்.

5 காவலர்கள் கைது

இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அதனைதொடர்ந்து பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், தந்தை, மகன் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்தனர். போலீசார் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி, உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் மற்றும் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோரை கைது செய்ததது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பும், ஊதியத்துடன் விடுப்பும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, கைது செய்தவர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் சிபிசிஐடியின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், கைதான ஆய்வாளர் உள்ளிட்டோரை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்த அனுமதி அளித்தனர்.

நீதிபதிகள் பாராட்டு

5 காவலர்களை கைது செய்த சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி உருவாக்கியுள்ளதாக கூறினர். பாதிக்கப்பட்ட தந்தை, மகன் குடும்பத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடியின் நடவடிக்கை அமைந்துள்ளதாகவும், சாத்தான்குளம் சம்பவம் போல் இனி தமிழகத்தில் எங்கும் நடக்கக்கூடாது எனவும் அவர்கள் கூறினர். 24 மணிநேரத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்ததன் மூலம் தமிழக காவல்துறையினர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாக நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here