நடிகை வனிதா தன்னை மிரட்டுவதாக அச்சம் தெரிவித்துள்ள பீட்டர் பாலின் முதல் மனைவி, தனது கணவர் தனக்கு வேண்டும் என கூறியுள்ளார்.

கடந்து வந்த வாழ்க்கை

தென்னிந்திய திரை நட்சத்திர ஜோடியான விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியரின் மகள் நடிகை வனிதா. கடந்த 1995ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு மாணிக்கம் எனும் படத்தில் நடித்தார். இரு படங்களும் சரியாக ஓடாததால் சினிமாவை விட்டு விலகிய வனிதா, நடிகர் ஆகாஷை திருமணம் செய்து 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பின் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்து பின்னர் 2010ல் அவரை விவாகரத்து செய்தார். வனிதாவிற்கு முதல் கணவர் மூலம் இரு குழந்தைகளும், இரண்டாவது கணவர் மூலம் ஒரு குழந்தையும் உள்ளனர்.

பீட்டருடன் திருமணம்

தனது வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்தித்த நடிகை வனிதா, சிறிது காலம் பிள்ளைகளுடன் வாழ்க்கையை ஓட்டி வந்தார். இதனிடையே இயக்குநர் பீட்டர் பால் என்பவரது அறிமுகம் கிடைத்தபின் இருவரும் பழக ஆரம்பித்தனர். பின்னர் அது காதலாக மாறியதையடுத்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். பீட்டர் பால் வந்த பிறகு தனது வாழ்வில் வசந்தம் வீசுவதாக வனிதா மெய்சிலிர்க்க கூறினார். தனது பிள்ளைகளின் சம்மதத்துடன், கிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பாலை வனிதா திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கொரோனா ஊரடங்கு காரணமாக மிக எளிமையாக நடந்தது. காதலரை கரம் பிடித்த சிறிது நேரத்தில் அவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

புகார், விளக்கம்

இந்த நிலையில், சென்னை வடபழனி காவல் நிலையத்தில் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்துள்ளார். அதில், பீட்டருடன் திருமணமாகி தனக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், முறையாக விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்ததாக கூறியுள்ளார். முறையாக விவாகரத்து அளித்த பிறகே, வனிதாவை திருமணம் செய்துகொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்த நடிகை வனிதா, கடந்த 8 வருடங்களுக்கு முன்னரே பீட்டர் அவரை பிரிந்து விட்டார். திருமண ஏற்பாடுகள் நடந்த போது அமைதியாக இருந்த எலிசபெத் ஹெலன், தற்போது புகார் அளிக்க காரணம் என்ன. பணம் பறிப்பதற்காக வேண்டும் என்றே இதுபோல செய்கிறார். ரூ. 1 கோடி பணம் கேட்டு பிளாக் மெயில் செய்கிறார். எலிசபெத்தின் புகாரை சட்டப்படி சந்திப்பேன் எனக் கூறினார்.

வனிதா மிரட்டல்?

இதனிடையே, நடிகை வனிதா தன்னை மிரட்டுவதாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், வனிதாவும், பீட்டர் பாலும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியானதுமே காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறினார். நான் ஒரு ஆள் நாலு வக்கீலுக்கு சமம் என்றும் தனக்கு காவல்துறையில் பலரை தெரியும் எனவும் வனிதா கூறியதாக ஹெலன் தெரிவித்துள்ளார். தனது கணவர் தனக்கு வேண்டுமெனக் குறிப்பிட்ட அவர், வனிதா மிரட்டுவதால் தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here