நடிகர் அஜித்தின் அறிவுறுத்தலின் படி தக்‌ஷா குழு சிவப்பு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் களமிறங்கி உள்ளது.

கொரோனா வைரஸ்

சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பாதிப்பு உச்சமடைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மதுரையிலும் நேற்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தடுப்பு நடவடிக்கை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். கொரோனா தடுப்பு பணியின் ஒருபகுதியாக அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. கிருமிநாசினி தெளித்து வரும் தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. இருப்பினும் எந்தவித தொய்வும் இன்றி கொரோனா தடுப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அஜித் ஐடியா

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் யோசனையை நடிகர் அஜித் வழங்கியதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சிவப்பு மண்டலங்களில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினிகளை தெளிக்க நடிகர் அஜித்தின் அறிவுறுத்தலின்படி தக்‌ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதிக திறன் கொண்ட ட்ரோன்களை வடிவமைக்க அஜித், தக்‌ஷா குழுவுக்கு ஆலோசனை வழங்கினாராம். அதன்படி தற்போது 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிருமி நாசினியை சுமந்து செல்லும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள ட்ரோன், சுமார் 30 நிமிடத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கிருமி நாசினி தெளிக்கும் திறன் கொண்டதாம். சென்னையில் நடைபெற்ற இதன் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here