கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 61.

மூச்சுத்திணறல்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகவும், சென்னை திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருந்தவர் ஜெ.அன்பழகன். 61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வருகிறார். திமுகவின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவராக இருந்து வந்த அன்பழகன், மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந் தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கவலைக்கிடம்

இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மருத்துவர்களிடம் விசாரித்தார்.

ஜெ. அன்பழகன் மறைவு

இந்நிலையில் ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடைமுறைகளுக்கு பிறகு ஜெ. அன்பழகன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜெ. அன்பழகன் உயிரிழந்ததன் மூலம் கொரோனாவுக்கு தமிழகத்தில் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

முதலமைச்சர் இரங்கல்

எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here