விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப்பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர் எனப்பொருள் கூறப்படுகிறது. திருமுருகன் அவதரித்த நாள் பெளர்ணமியுடன் கூடிய வைகாசி நட்சத்திரம் வரும் நாளாகும். அந்த நாளையே வைகாசி விசாகம் என்று பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நீள் ஆயுள் நல்கும்

வைகாசி விசாகம், முருகனின் திரு அவதார நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதைப்போலவே எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது. எனவே இந்நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நோய்கள் நீங்கி, நீடித்த ஆயுள் கிடைப்பதாகக் கருதப்படுகிறது.

நம்மாழ்வார் அவதரித்த தினம்

மகாபாரதத்தில் வில் வீரரான அர்ஜுனன் பாசுபத ஆயுதத்தை சிவபெருமானிடமிருந்து பெற்ற நாள் இந்த வைகாசி விசாகம் ஆகும். மேலும் திருமழப்பாடி என்னும் ஊரில் சிவபெருமான் மழு ஏந்தி திருநடனம் புரிந்ததும் இந்நாளே. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினமும் இந்நாளே ஆகும்.

கல்வெட்டில் விசாகம்

சோழ சக்கரவர்த்தியான ராஜராஜசோழனின் சரித்திரத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடகக் கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ராஜேந்திர சோழன் பிறப்பித்த ஆணை இருந்ததாக தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டு செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.

குமார சம்பவம்

வடலூரில் ராமலிங்க அடிகளார் சத்யஞான சபையை நிறுவியதும் இந்நாள்தான். பெரும்பான்மையான கோயில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று பிறப்பவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது. வான்மீகி ராமாயணத்தில் விஸ்வாமித்திரர் ராம-லட்சுமணர்களுக்கு குமரனின் பிறப்பு மற்றும் பெருமைகளைக் கூறுவார். மேலும் இதனை கூறுபவர் மற்றும் கேட்பவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக சொல்லுவார். இந்நிகழ்வை குமாரசம்பவம் என்று வான்மீகி குறிப்பிடுவார். இதனைப் பின்பற்றியே வடமொழிக்கவிஞரான காளிதாசர் முருகனின் பிறப்பு மற்றும் அவரின் பெருமைகள் பற்றி கூறி, அந்நூலிற்கு குமார சம்பவம் என்றும் பெயரிட்டுள்ளார்.

வசந்தோற்சவ விழா

சித்தார்த்தர் என்னும் கெளதம புத்தர் பிறந்த நாளும், அவர் ஞானத்தை அடைந்த நாளும் வைகாசி பெளர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. இதனையே புத்த பூர்ணிமா என்று அழைக்கின்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த வைகாசி விசாகத்தில் நாமும் விரத முறையைப் பின்பற்றி வாழ்வின் உயர்ந்த நிலையை அடைவோம். வைகாசி மாதம் என்பது வசந்த காலம் எனப்படும் இளவேனிற்காலத்தின் பிற்பகுதி ஆகும். எனவே வைகாசி விசாகத்தில் கோயில்களில் வசந்தோற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.

திருச்செந்தூர் விழா

இளவேனிற்காலத்தில் இவ்விழா நடைபெறுவதால் திருச்செந்தூரில் கருவறையில் தண்ணீர் கட்டி நிற்கும்படி செய்து இறைவனுக்குச் சிறுபருப்புப் பாயாசம், நீர்மோர், அப்பம் முதலியவற்றைப் படைத்து உஷ்ணசாந்தி உற்சவம் (வெப்பம் தணிக்கும் விழா) என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இங்கு வசந்த மண்டபத்தில் உள்ள நீர்த்தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை நீரில் இடப்பட்டு, குமரன் வாயில் இருந்து சிந்திய பாலினை உண்டதால் சாபம் நீங்கப்பெற்ற பராசர முனி குமாரர்களை நினைவுப்படுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவங்களையும் வைத்து சாப விமோசன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here