அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘நிசர்கா’ புயல் தீவிர புயலாக மாறி இன்று கரையை கடக்க உள்ளதால் மும்பையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

‘நிசர்கா’

அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் புயலாக உருவானது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ‘நிசர்கா’ புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியை நோக்கி மணிக்கு 11 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கியது.

சூறாவளி காற்று வீசும்

‘நிசர்கா’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்று தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று பிற்பகல் மகாராஷ்டிரா – தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 105 முதல் 115 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்றுடன், கனமழை பெய்யும் என்றும் இதனால் மகாராஷ்டிராவின் மும்பையும், கடலோர மாவட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

விமானம், ரயில்கள் ரத்து

இதனால் இரு மாநிலங்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மற்றும் கடலோர காவல் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மும்பையில் இருந்து புறப்படும் மற்றும் மும்பைக்கு செல்லும் விமானங்கள் மற்றும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here