ஜோர்டானில் இருந்து கேரளா திரும்பிய நடிகர் பிருத்விராஜை அம்மாநில சுகாதாரத்துறையினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

முன்னணி நடிகர்

தமிழில் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிருத்விராஜ். மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சிக்கித்தவித்த படக்குழு

இந்த நிலையில், பிளஸ்ஸி இயக்கும் ‘ஆடுஜீவிதம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் ஜோர்டான் சென்றிருந்தார். பிருத்விராஜ் ஜோர்டானுக்கு சென்ற பிறகுதான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பிருத்விராஜூம், அவரது படக்குழுவினரும் நாடு திரும்ப முடியாமல் ஜோர்டானிலேயே சிக்கிக்கொண்டார்.

கோரிக்கை

அங்குள்ள பாலைவனத்தில் சிக்கித் தவித்த பிருத்விராஜ், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக வலைதளம் மூலம் உருக்கமான பதிவுகளை வெளியிட்டார்.

தாயகம் திரும்பினார்

இதனிடையே, வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, வந்தே பாரத் திட்டத்தின் மூலம் நடிகர் பிருத்விராஜ் உட்பட படக்குழுவினர் 57 பேரும் இந்தியா அழைத்து வரப்பட்டனர். ஜோர்டானில் இருந்து டெல்லி வந்த அவர்கள், பின்னர் வேறு ஒரு விமானம் மூலம் கேரளா வந்தடைந்தனர்.

சுகாதாரத்துறை நடவடிக்கை

கொச்சி விமான நிலையம் வந்த பிருத்விராஜை அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். இந்த நிலையில், பிரித்விராஜ் மற்றும் அவர் உடன் வந்த 58 பேரையும் கேரள மாநில சுகாதாரத் துறையினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தி உள்ளனர். .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here