காசுக்கு ஆசைப்பட்டு மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் அரசு வாதாடிக் கொண்டிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

டாஸ்மாக், கண்டனம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் அத்தியாவசிய தேவைக்கே கடும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பதா என்ற விமர்சனமும் எழுந்தது.

அதிரடி உத்தரவு

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மே 17ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கமல் விமர்சனம்

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்துவிட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு என அவர் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here