டாஸ்மாக் மதுக்கடை திறப்பு வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் திறப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் மே 7-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடந்தது.

கண்டனம்

40 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், உற்சாகமடைந்த மது பிரியர்கள், கைத்தட்டியும் விசிலடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், சமூக இடைவேளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று அவர்கள் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் திறப்புக்கு அரசியல் கட்சியினரும், திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

அதிரடி உத்தரவு

இதற்கிடையை, திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேல்முறையீடு

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும்  மாநில எல்லைகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேவியட் மனு தாக்கல்

தமிழக அரசின் மேல்முறையீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்கக் கோரி மகளிர் ஆணையம் சார்பில் லட்சமி மணியரசனும், மக்கள் அதிகாரம் சார்பில் மகாலக்ஷ்மி என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here