தமிழ் திரையுலகில் தன்னுடைய கடுமையான உழைப்பால் தனக்கென்று தனி இடம் பிடித்திருப்பவர் நடிகர் அஜித்குமார். எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் திரைத்துறைக்குள் நுழைந்து தன்னுடைய நடிப்பு திறமையாலும், நேர்மையாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ஆகவே தான் அவர் தன் ரசிகர் மன்றங்களை கலைத்த பிறகும் கூட அஜித்தின் ரசிகர் பட்டாளம் ஒவ்வொரு படத்திற்கும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஏங்கும் ரசிகர்கள்

கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற அஜித்-ஷாலினி திருமணத்தில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர். அதன்பின்னர் பொது நிகழ்ச்சிகளிலும், திரைப்பட கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்வதை அஜித் குறைத்துக் கொண்டார். அவர்களது ரசிகர்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு தல வர மாட்டாரா என்று ஏக்கமுற்றனர்.

ஆதரவும், எதிர்ப்பும்

கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு, ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய அஜித், இதுபோன்ற விழாக்களில் எங்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி வரவழைக்கின்றனர் என்றார். அவரின் பேச்சைக் கேட்டு அரங்கில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார். திமுக தரப்பில் இருந்து அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்பலைகள் கிளம்பின. அஜித்தின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்தன.

பாராட்டிய கருணாநிதி

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்துடன் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்ற அஜித், தனது பேச்சுக்கான விளக்கத்தை அளித்தார். இந்தச் சந்திப்புக்கு பின்னர், ‘அஜித் ஒரு தும்பை மலர், அது மாசற்ற மலர்’ என அவரை பாராட்டி கருணாநிதி அறிக்கை வெளியிட்டு தொடர் சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

“ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை”

இந்நிலையில், 2002ஆம் ஆண்டு திரைப்படத்துறைக்கு தமிழக அரசு விருது வழங்கும் விழாவில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அஜித்திற்கு ‘பூவெல்லாம் உன் வாசம்’  படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கினார். இதன் பிறகு அவ்வப்போது ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை அஜித் என தகவல்கள் உலாவின. அதிமுகவில் முக்கிய பொறுப்பை ஜெயலலிதா அவருக்கு வழங்க இருப்பதாகவும் செய்திகள் பரவின. இதற்கு காரணம் அவர் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்ததே காரணம் என கூறப்பட்டது. இந்த புரளிகளையும் அவர் உடைத்தெரிந்தார். தன்னை சுற்றி வரும் அரசியல் விமர்சனங்களையும், சூழ்ச்சமங்களையும் அவர் பொருட்படுத்தவே இல்லை. காரணம் அவர் அரசியலில் அவருக்கு நாட்டம் இல்லை என்பதே. 

கடும் விமர்சனம்

ஈழ தமிழர்கள் பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்த போது. திரையுலகினர் அனைவரும் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தனர். அந்த போராட்டத்திற்கு அஜித் செல்லவில்லை. காவிரி பிரச்சனைக்கு திரைத்துறை சார்பாக நடைபெற்ற போராட்டத்திலும் அவர் பங்கெடுக்கவில்லை. இதனால் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் தேசிய வாதிகள் பலர் அஜித்தை கடுமையாக விமர்சித்தனர்.

அதிமுகவினர் கொந்தளிப்பு

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட போது திரைத்துறையினர் சார்பில் போராட்டாம் அறிவிக்கப்பட்டது. அதில் அஜித் கலந்துக் கொள்ளவில்லை. இதனால், அஜித் மீது அதிமுகவினர் ஆத்திரம் அடைந்திருந்தனர். திரையரங்குகளில் அஜித் திரைப்படம் வெளிவர விட மாட்டோம் என கோபமுற்றனர். அதையும் கடந்து வந்தார் அஜித்.

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் ஜெயலலிதா உயிரிழந்தபோது, வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த அஜித், மறுநாளே புறப்பட்டு சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இரவு நேரத்திலும் கூட ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கருணாநிதிக்கு அஞ்சலி

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெற்று வந்தபோது, காவேரி மருத்துவமனைக்கு சென்ற அஜித், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் உயிரிழந்த போதும் ராஜாஜி மண்டபத்தில் உடல் வைக்கப் பட்டிருந்த போதும் முதல் ஆளாக சென்று அஞ்சலி செலுத்தினார்.

நிலை குலைந்த அஜித்

அரசியலை விட்டு ஒதுங்கியே இருந்து வந்த அஜித்தை நிலை குலைய வைத்தது ஒரு சம்பவம். திருப்பூரில் அஜித் ரசிகர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அஜித்தை பாராட்டியதோடு, அவரது ரசிகர்கள் பிரதமர் மோடியின் சாதனையை பரப்ப வேண்டும் என்றார். இது தமிழக அரசியலில் பூதாகரமாக வெடித்தது.

அரசியலுக்கு பயன்படுத்தாதீர்

தமிழகத்தின், இரு திராவிட கட்சிகளிலும் வாய்ப்பு இருந்தும் அதுவல்ல என்னுடைய பணி என்று, தன்னையும் தன் ரசிகர்களையும் பயன்படுத்தியவர்களுக்கு இந்த செய்தி தூக்கி வாரி போட்டிருக்கிறது. எத்தனையோ பிரச்சனையை கண்டு அமைதி காத்த அஜித், அரசியல் சாயத்தில் இருந்து காக்க திடீரென அதிரடி அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை தன் அரசியல் நிலைபாடு என்ன, என்னை நீங்கள் அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள் என பல கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்.  

‘தல’ பிறந்தநாள்

இப்படி தனக்கான ஒரு தனி வழியில் வாழும் அஜித், இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here