அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம், கோவை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பரவலாக மழை

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி் மாவட்டம் பந்தலூரில் 11 செ.மீ. மழையும், வால்பாறை வட்டாச்சியர் அலுவலகத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 13.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் அலை 2.5 முதல் 3.6 மீட்டர் வரை எழும்பக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய்ம் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here