புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நெஞ்சைப் பதற வைப்பதாக நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

படுகொலை

புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு புதுச்சேரி நகரின் பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், பொதுமக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடும் கண்டனம்

இதனிடையே, புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; “புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு விஜய் அதில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here