சென்னை அருகே ‘கங்குவா’ படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பார்ப்பு

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். மேலும் போஸ் வெங்கட், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கங்குவா படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், யு வி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. 3d தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விபத்து

இந்த நிலையில், படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த ஈவிபி பிலிம் சிட்டியில் ‘கங்குவா’ படத்தின் சண்டைக்காட்சி தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது 10 அடிக்கு மேல் இருந்த ரோப் கேமரா அறுந்து நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்ததாகவும், இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்பிடிப்பின்போது கிரேன் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here