தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உடல் நலக்குறைவு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து புழல் சிறையில் இருந்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிகிச்சை பெற்றபின், மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மீண்டும் மனு
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார். மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.