நடிகர் பிரபு தேவாவுக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பன்முக திறமையாளர்

1994 ஆம் ஆண்டு ‘இந்து’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் பிரபுதேவா. காதலன், ராசையா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி என்று தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த பிரபுதேவா, 90களில் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் சேர்ந்தார். தெலுங்கு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரபுதேவா, 2007 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘போக்கிரி’ என்ற படத்தின் மூலம் தமிழிலும் இயக்குநரானார். முரளி நடித்த இதயம் படத்தில் பிரபலமான ‘ஏப்ரல் மேயில’ பாடலின் மூலம் முன்னணி நடன கலைஞராக அறிமுகமானார். அதன்பிறகு நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து அசத்தினார் பிரபுதேவா. அவரது நடிப்பில் உருவான ஏழையின் சிரிப்பில், உள்ளம் கொள்ளை போகுதே, பெண்ணின் மனதை தொட்டு, மின்சார கனவு உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. நடிகர், நடன கலைஞர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என்று அனைத்திலும் முன்னிலையில் இருப்பவர் பிரபுதேவா.

விவாகரத்து

தன்னுடைய முதல் மனைவி ரமலதாவை,  1995 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகர் பிரபுதேவா. இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், அது பெரிதாக வெடித்து ஒரு நிலையில் விவாகரத்து வரை சென்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், நடிகை நயன்தாரா தான். பிரபு தேவாவை உயிருக்கு, உயிராக காதலித்து வந்த நிலையில், இருவரின் உறவும் திருமணம் வரை சென்று பிரிந்தது. பிரபுதேவா, நயன்தாராவின் காதல் தோல்விக்கு பின்னர், தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவதிலும்,  நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட்டான ஹிமானி சிங் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை பிரபு தேவாவின் மூத்த சகோதரர் ராஜு சுந்தரம் உறுதி செய்தார்.

பெண் குழந்தை

திருமணம் ஆகி இரண்டு வருடங்களாக மனையுடன் பொது இடத்திற்கு வருவதை தவிர்த்து வந்த பிரபு தேவா, கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு, இரண்டாவது மனைவி ஹிமானி சிங்குடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், பிரபுதேவாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகும் நிலையில், தற்போது தான் இந்த செய்தி வெளியாகியுள்ளது. தன்னுடைய ஐம்பது வயதில் அப்பாவான பிரபுதேவா  இரண்டாவது மனைவியின் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள தகவல், சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதுடன், ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here