புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் தாம்பூலப் பையில் குவாட்டர் மதுபாட்டில் போட்டுக்கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பூலம்

பொதுவாக திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தாளிகளுக்கு, திருமணம் முடிந்தவுடன் உணவு அருந்திவிட்டு செல்லும்போது தாம்பூலம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த தாம்பூல பையில் சாத்துக்குடி, மாம்பழம், லட்டு, புத்தகம், மரக்கன்றுகள், பூச்செடிகள், அப்படி இல்லை என்றால் தேங்காய் போட்டு கொடுப்பார்கள். ஆனால், புதுச்சேரியில் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் தாம்பூலப் பையில் மதுபாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குவாட்டர் பாட்டில்

சென்னை சேர்ந்த நிர்மல் என்பவருக்கும், புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த ஆரத்தி என்ற பெணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியடையும் வகையில், மணமகன் வீட்டார் வழங்கிய தாம்பூலப் பையில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் குவாட்டர் மதுபாட்டிலையும் சேர்த்து கொடுத்து திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

கேட்டு வாங்கிய உறவினர்கள்

ஆனால் சரக்கு பாட்டில் தாம்பூலப் பையை சில பேர் இரண்டு கொடுங்கள் என்று கேட்டுக் வாங்கியும், சில பேர் சரக்கு பாட்டில் வேண்டாம் வெறும் தாம்பூலப் பையை மட்டும் கொடுங்கள் என்றும் வாங்கி சென்றனர். இந்த தாம்பூல பையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் திருமணத்திற்கு வந்த குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவருமே இதை பெற்றுச் சென்றனர். திருமணத்திற்கு வந்தவர்களை குஷிப்படுத்தும் வகையில் திருமண வீட்டார் செய்த இந்த செயல், உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் புதுச்சேரியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் பெரும்பாலும் மது அருந்த வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவர்களின் ஆசையையை நிறைவேற்றவே இதை செய்ததாக மணமக்களின் நண்பர்கள் கூறினர்.

அபராதம் விதிப்பு

இதனிடையே, தாம்பூலப் பையில் மதுபாட்டில் கொடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ புதுச்சேரி மாநில கலால்துறையின் கண்ணில் பட்டது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட கலால் போலீசார், சம்மந்தப்பட்ட திருமண வீட்டாருக்கு ரூ.50,000 அபராதம் விதித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here