தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் “கருமேகங்கள் கலைகின்றன” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை அதிதி பாலன்.

பலமான கூட்டணி

தமிழ் திரையுலகில் மண் சார்ந்த வாழ்வியல் படைப்புகளை தந்த இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமாக படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன”. பாரதிராஜா, கௌதம் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

சிறப்பான அனுபவம்

இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை அதிதி பாலன் கூறியிருப்பதாவது,” இந்தப் படம் எனக்கு உண்மையில் ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது , பாரதி ராஜா , தங்கர்பச்சான் போன்ற அனுபவம் மிக்கவர்களிடம் இருந்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. தங்கர்பச்சான் சாரின் வழக்கமான குடும்பம் மற்றும் மனிதர்களின் உணர்வை அடிப்படையாக கொண்ட கதை, முக்கியமாக இந்தப்படத்தில் பெண்ணுக்கும் குழைதைக்கும் இருக்கும் உறவை சொல்லியுள்ளார் , கதையை தாண்டி பெரும் ஆளுமைகளுடன் இணைந்து நான் பணி புரிந்தது மிக மிக நல்ல அனுபவம். அவர்களின் வேலையை பக்கத்தில் இருந்து பார்த்து நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.
பாரதி ராஜா சார் நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங்களை எனக்கு அழகாக சொல்லிக் கொடுத்தார் அது எனக்கு இப்படத்தில் கிடைத்த சிறப்பான அனுபவம்.

எதுவும் சொல்ல மாட்டேன்

கண்மணி எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். படம் பார்த்ததும் அனைவரின் மனதில் பதியும் ஒரு கதாபாத்திரமாக இது இருக்கும், பல கஷ்டங்களை அனுபவித்து, பின் ஒரு மிகப்பெரிய பொறுப்பு கிடைக்கும் போது அதனை எவ்வாறு ஒரு பெண் கையாளுகிறார் என்பதே எனது கதாபாத்திரம், இதற்கு மேல் சொல்லக்கூடாது. படத்தின் கதாப்பாத்திரம் பத்தி எதுவுமே சொல்ல முடியாது. ஒரு காவல் துறை அதிகாரியாக இருந்து அதிலிருந்து விலகி மீண்டு வர நினைக்கிறார். இப்போதைக்கு இது போதும் படம் பாருங்கள் அதில் நிறைய சுவாரஸ்யம் இருக்கும். பாரதி ராஜாவின் கதாபாத்திரத்துக்கும் தலைப்பிற்கும் தான் சம்மந்தம் உள்ளது , அவரின் பயணத்தை வைத்து தான் படம். இந்தப் படத்தில் பாரதிராஜா நீதிபதி. கௌதம் மேனன் வக்கீல். யோகிபாபு ஒரு குழந்தையின் மீது அன்பு உள்ளவராக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும்.

தங்கர் பச்சானுடன் பணிபுரிந்த அனுபவம்

தனக்கென என்ன வேண்டுமென்பதில் தெளிவாக இருப்பார். படத்தில் எனக்கான இடத்தை தந்திருக்கிறார், என் மீது கோவப்பட்டதில்லை. எனக்கு இந்தப்படம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தங்கர் பச்சனோடு வேலை பார்ப்பது கஷ்டம் என்று சொன்னார்கள் ஆனால் எனக்கு அது போன்று தோணவே இல்லை. இந்தப்படம் அவவளவு அழகிய நினைவுகளை தந்துள்ளது. மலையாளத்தில் Cold Case படத்தில் நடித்தேன் அதன் பிறகு “படவெட்டு” என்று நிவின் பாலியுடன் ஒரு படம் நடித்தேன் இப்போது ஒரு படம் நடித்துள்ளேன். ஆனால் அது இன்னும் வெளியாக வில்லை. இன்னும் சில படங்கள் நடிக்க பேசிக்கொண்டு இருக்கிறேன். தமிழ் போல தான் மலையாளமும் எனக்கு பெரிய வித்தியாசம் தெரியவில்லை.

அருவி படத்தில் மறக்க முடியாத அனுபவம்

எனக்கு அது முதல் படம் அதனால் அதிக பயம் இருந்தது. நடிக்க பயம் இல்லை ஆனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வந்து விட கூடாது, நம்மால் பிறரது வேலை பாதிக்க கூடாது என பயமாக இருந்தது. நான் கொஞ்சம் கவனமாகவே நடித்தேன். அந்த படத்தில் கிடைத்த கதாபாத்திரம் தன் என்னை இந்த அளவிக்கு கொண்டு வந்திருக்கிறது. இப்போது ‘கருமேகங்கள் கலைகின்றன’ மிகுந்த நம்பிக்கை தருகிறது. கௌதம் மேனனுடன் எனக்கு ஒரு காட்சி மட்டும் தான் இருந்தது. அவர் பெரிய மெனக்கிடல் எல்லாம் இல்லாமல் சுலபமாக ஒரு காட்சியை அழகாக்கி விடுகிறார், எனக்கு சில அறிவுரைகள் கூறினார். அவருடன் வேலை செய்த அனுபவம் அருமையாக இருந்தது. நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.

தமிழில் அதிக படம் நடிப்பதில்லை

எனக்கும் காரணம் தெரியவில்லை, எனது முந்தைய படத்தின் கதாபாத்திரம் அனைத்தும் சீரியசாக அமைந்ததுவிட்டது அதனால் நான் இது போன்ற கதாபாத்திரம் மட்டும் தான் நடிப்பேன் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் அனைத்து கதாபாத்திரத்திலும் நடிக்க ஆசையாக தான் இருக்கிறேன். மற்றும் என்னை பொதுவெளியில் வெளிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் இல்லை. இனிமேல் நிறைய நடிக்க முயற்சிக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here