‘பிச்சைக்காரன்-2’ திரைப்படம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு ஏப்ரல் 12ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நடிகர் விஜய் ஆண்டனிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படப்பிடிப்பு மும்முரம்

‘பிச்சைக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி விஜய் ஆண்டனி இயக்கியும், நடித்தும், இசையமைத்தும் வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காவ்யா தாப்பர், யோகிபாபு, ராதா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏப்ரல் 14ம் தேதி ‘பிச்சைக்காரன்-2’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. 

உத்தரவு

இந்த நிலையில் ‘பிச்சைக்காரன்-2’ திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி மாங்காடு மூவீஸ் உரிமையாளர் ராஜ கணபதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தனது தயாரிப்பில் 2016ம் ஆண்டு வெளியான ஆய்வுக்கூடம் படத்தின் கருவையும், வசனத்தையும் தனது அனுமதி இல்லாமல் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன்-2’ படத்தில் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி சவுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி நடிகர் விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here