ராஜா ராணி படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் ஜெய் புதிய படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.

முக்கியமான படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து கொண்டிருந்த நயன்தாராவுக்கு “ஜவான்” படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. அட்லி இயக்கும் இந்த படத்திற்கு மிகுந்த ஆவல் நிலவி வருகிறது. 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி, அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் இவரது கெரியருக்கு ராஜா ராணி படம் மிகவும் முக்கியமாக அமைந்தது. இந்த படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ராஜா ராணி படத்திற்குப் பிறகு தற்போது நயன்தாரா மற்றும் ஜெய் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

மீண்டும் இணைந்த கூட்டணி

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நயன்தாரா – ஜெய் ஜோடி இணைகின்றது. நயன்தாராவின் 75வது படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில், ஜெய் இணைந்துள்ளதாக அவரது பிறந்தநாள் பரிசாக இன்று போஸ்டருடன் பட குழு வெளியிட்டுள்ளது. ராஜா ராணி படத்தில் ஜெய் மற்றும் நயன்தாராவின் காம்போ ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த படத்திலும் இவர்களது கூட்டணி ரசிக்கும் படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. லேடி சூப்பர் ஸ்டார் 75 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். டிரைடெண்ட் ஆர்ட் ரவீந்திரன் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here