நடிகை ஐஸ்வர்யா ராயால் தனக்கு கிடைத்த வெற்றியைப் பற்றி பொன்னியின் செல்வன் 2 டிரெய்லர் வெளியிடும் மேடையில் ஃப்ளாஷ்பேக் ஸ்டோரியாக கூறி அசத்தியுள்ளார் சிம்பு.

பிரம்மாண்ட மேடை

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்பு பங்கேற்றனர். பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏழு பாடல்களும் நேற்று வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நேரு உள்விளையாட்டு அரங்கம் முழுவதும் மக்கள் வெள்ளம் போல் குவிந்து ஆரவாரத்துடன் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

அதிர்ந்து போன அரங்கம்

பிரபலங்கள் ஒவ்வொருவராக மேடையில் ஏறி பொன்னியின் செல்வன் படத்தை புகழ்ந்து பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் நடிகர் சிம்பு மேடையில் ஏறும் பொழுது ஒரு நிமிடத்திற்கும் மேல் பார்வையாளர்கள் கூச்சலால் அரங்கமே அரண்டு போனது. பிறகு சிம்பு பேசுகையில்; “இயக்குநர் மணிரத்தினத்தை நான் குழந்தையாக தான் பார்க்கிறேன். ஏனென்றால் ஒரு குழந்தை தனக்கு வேண்டியதை அடம்பிடித்து வாங்கும். அதேபோல் தான் மணிரத்தினம் தனக்கு வேண்டியதை நடிகர்களிடமிருந்து அடம்பிடித்து வாங்குவார். சினிமா துறையில் பல பேர் எனக்கு வாய்ப்பு கொடுக்க யோசித்தபோது, எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் மணிரத்தினம் தான். அவருக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன். இரவில் அதிகநேரம் முழித்திருந்து, காலையில் அதிக நேரம் தூங்குவேன். ஆனால் இப்போது ஒழுங்காக காலையில் 6 மணிக்கு எல்லாம் எழுந்து விடுகிறேன். படப்பிடிப்பிற்கும் நேரத்திற்கு சென்று விடுகிறேன். அதற்கு காரணம் மணிரத்தினம் மட்டும்தான்” என்று கூறினார்.

அழகிற்காக பரிசு

ஐஸ்வர்யா ராய் குறித்து சிம்பு பேசுகையில் அரங்கமே அசந்து போனது. அவர் கூறுகையில்; “ஐஸ்வர்யா ராயிடம் நான் என் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர வேண்டும் என நினைக்கிறேன். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஓவிய போட்டி நடந்தது. நான் நன்றாக ஓவியம் வரைவேன். அதனால் அந்த ஓவிய போட்டியில் கலந்துகொண்டேன். அப்போட்டியில் மனித முகத்தை ஓவியமாக வரைய சொல்லி இருந்தார்கள். அப்பொழுது நான் ஐஸ்வர்யா ராய் முகத்தை தான் வரைந்தேன். முதல் பரிசும் பெற்றேன். நான் அழகாக வரைந்ததால் தான் பரிசு கிடைத்தது என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நீண்ட நாட்கள் கழித்து தான் தெரிந்தது அது உங்களின் அழகிற்காக கிடைத்த பரிசு” என்று கூறினார் சிம்பு. இதனைக் கேட்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி ரசித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here