ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டார்.

மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடந்த வாரம் புதன்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இளங்கோவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மருத்துவமனை அறிக்கை

XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதி அடைந்ததாகவும், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகினது. இந்த நிலையில், இளங்கோவன் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டார். நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இளங்கோவன் உடல்நிலை தேறி வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here