சாதி, மதத்தின் பெயரில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பேச்சு

கோவை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதன் ஒரு பகுதியாக மாற்றுகட்சியினர் திமுகவில் இணையும் விழா சின்னியம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில்; திமுகவை போல் வெற்றிபெற்ற கட்சியும் இல்லை, தோல்வியடைந்த கட்சியும் இல்லை. இந்திரா காந்தியின் எச்சரிக்கையை மீறி நெருக்கடி நிலையை எதிர்த்தவர் கருணாநிதி. ஆட்சியை பற்றி கவலைப்படாமல் ஜனநாயம், மக்களுக்காக குரல் கொடுத்தவர் கருணாநிதி.

குற்றச்சாட்டு

சொல்லாமல் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம். நாடாளுமன்ற தேர்தல் பணியை தற்போதே தொடங்க வேண்டும். திமுக ஆட்சி மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை காரணமாகவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. 2024 மக்களவை தேர்தலும் திமுக கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். ஆட்சிக்காக திமுகவை அண்ணா தொடங்கவில்லை. தமிழினத்துக்காக தொடங்கியதுதான் திமுக இயக்கம். முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியைத் தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின. சாதி, மதத்தின் பெயரில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு இன்றுமுதலே உழைக்க வேண்டும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here