மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்படாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆதார் இணைப்பு

தமிழக மின் வாரியம் சார்பில் வீடுகள் உட்பட 2.67 கோடி இணைப்புகளுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. அவர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. முதலில் டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஜனவரி 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் பலர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காததால், மேலும் 15 நாட்கள் (பிப்.,15 வரை) நீட்டிக்கப்பட்டு, அதற்குள் இணைக்க வலியுறுத்தப்பட்டது.

இன்றோடு கடைசி

இருப்பினும் சுமார் 7 லட்சம் பேர் வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத்தால் பிப்ரவரி 28ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து இணையதளம் மூலமாகவும், மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. இதுவரை 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாளாகும். கடந்த முறை கால நீட்டிப்பு வழங்கிய போது இனிமேல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். எனவே, மீதமுள்ள மின் பயனாளர்கள், ஆதார் எண்ணை இன்றே இணைக்க வேண்டும் என்று மின்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here