ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு சசிகலா, டிடிவி தினகரன், விஜயகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மரணம்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது 95). இவருக்கு, வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் பழனியம்மாள் நாச்சியாரின் உடல்நிலை கவலைக்கிடமானது. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் தெற்கு அக்ரகாரம் தெருவில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் பழனியம்மாள் நாச்சியாரின் உயிர் பிரிந்தது. தாயார் மறைவு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேதனை

ஓ.பன்னீர்செல்வத்தின் தயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; “முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. எனக் குறிப்பிட்டுள்ளார்.

வருத்தம்

சசிகலா வெளியிட்ட டுவிட்டர் பதிவில்; “தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும், இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். தனது தாயாரை இழந்து வாடும் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்”. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

அதிர்ச்சி

அம்மா மக்கள் முன்ணேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவருமான திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் திரு.ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இரங்கல்

இதேபோல் தெலங்கானா அளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமாக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலர் ஓ.பன்னீர்செல்வம் தயாரின் மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here