சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் நடிகர் சிவகார்த்திகேயனின் சகோதரிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

தோல்வி

டாக்டர், டான் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்த சிவகார்த்திகேயன், பிரின்ஸ் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சிவகார்த்திகேயனின் இமேஜுக்கு ஏற்ற வலுவான கதை இல்லை என்பதே பிரின்ஸ் பட தோல்விக்கு முக்கியமான காரணமாக கூறப்பட்டது. இதனையடுத்து பிரின்ஸ் பட தோல்விக்கு பொறுப்பேற்று தயாரிப்பு தரப்புடன் இணைந்து விநியோகிஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கினார்.

புதிய படம்

தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார்.

அப்பா பெருமைகொள்வார்

இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் நடிகர் சிவகார்த்திகேயனின் சகோதரிக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ள செய்தியில், ”எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். எங்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள். சிறந்த மருத்துவர் விருதுக்காக வாழ்த்துகள் அக்கா. எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அப்பா நிச்சயம் பெருமைகொள்வார். உனது நேர்மையும், உழைப்பும் உன்னை நல்ல நிலைக்கு உயர்த்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here