தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் முக்கியமானது என்றும் கூட்டணி கட்சிகள் கலந்து பேசி வேட்பாளரை அறிவிப்போம் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவெரா. இவர் கடந்த 4-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்தது. இதற்கிடையில், மேகாலயா உள்ளிட்ட 3 மாநிலத் தேர்தலுடன், ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளிட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.,27-ல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக, திமுகவினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 2021 தேர்தலில் இந்த தொகுதி அதிமுக கூட்டணி சார்பில், தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தமாகா சார்பில் போட்டியிட்ட கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா தோல்வியடைந்தார்.

வெற்றியே இலக்கு

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமாகா, அதிமுக இடையே இன்று ஆலோசனை நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உடன், அதிமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதன்பின்பு ஜி.கே.வாசன் கூறுகையில்; இடைத் தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வெற்றியை உறுதி செய்ய வேண்டியது கூட்டணி கட்சிகளின் கடமையாக உள்ளது என்பதை நாங்கள் அறிந்து உள்ளோம். இதற்காக அதிமுக மூத்த தலைவர்கள் என்னை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். 2 நாட்களுக்கு முன்பு நான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து பேசினேன். தேர்தல் அறிவிப்பு வந்த உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். தற்போது அதிமுக தலைவர்கள் உடன் கலந்து பேசி இருக்கிறோம். எங்களின் இலக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு ஏற்றவாறு ஒரு சில நாட்களில் முடிவை அறிவிப்போம். கூட்டணி கட்சிகளின் ஒரே நோக்கம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். வேட்பாளர் யார் என்பது ஒரு சில நாட்களில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து பேசி அறிவிப்போம். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here