வருகிற 20, 21-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வலுபெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக – புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இடிமின்னலுடன் மழை

இதன் காரணமாக இன்று (18.11.2022) மற்றும் நாளை (19.11.2022) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பரவலாக மழை

21-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

பனிமூட்டம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

பரவலாக மழை

செங்கோட்டை (தென்காசி) 9 செ.மீ, குண்டாறு அணை (தென்காசி) 6 செ.மீ, பாபநாசம் (திருநெல்வேலி) 5 செ.மீ, மாஞ்சோலை (திருநெல்வேலி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி) தலா 4 செ.மீ, கடனா அணை (தென்காசி), தேக்கடி (தேனி), ராமநதி அணை (தென்காசி) தலா 3 செ.மீ, தென்காசி (தென்காசி), கருப்பாநதி அணை (தென்காசி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 2 செ.மீ, ஆயிக்குடி (தென்காசி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), நம்பியார் அணை (திருநெல்வேலி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று (நவ.18) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். நாளை (நவ.19) தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here