மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு குளிக்க சுற்றுலாபயணிகளிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

‘தென்னகத்தின் ஸ்பா’ என்றழைக்கப்படும் குற்றாலத்தில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தும் செல்வர். இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் குற்றாலத்தில் தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

குளிக்க தடை

இன்று அதிகாலை முதலே தென்காசி பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்த நிலையில், நேரம் செல்ல செல்ல மழை அதிகமாக பெய்தது. மதியம் சுமார் 12 மணி அளவில் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அந்த இரு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். முக்கிய அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள், பழைய குற்றாலம் அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகே அங்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here