காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. 

‘ரெட் அலர்ட்’

தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. இன்று காலை சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 16 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை கரையை கடக்கும்

தீவிரமடைந்துள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை (நவ., 19) சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here