சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால் நவம்பர் 18-ம் தேதி சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வங்கக்கடலில் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு, அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடையும் எனவும் நவம்பர் 18ம் தேதி தெற்கு ஆந்திரா – வட தமிழக கரை நோக்கி நகரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதிக கனமழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், சேலம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கனமழை எச்சரிக்கை

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் நவம்பர் 18ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here