‘கல்வி மாநில உரிமை’ என்கிற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென திரைப்பட நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

சமூக நீதிக்கு எதிரானது

நீட் தேர்வுக்கு நடிகர் சூர்யா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பெற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியை தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது.

நீட் தேர்வு ஆபத்தானது

எளிய குடும்பத்தினர் கல்வி பெற ஆதாரமாக இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் முறையை 40% மற்றும் 25% மாணவர்களில் 20% மாணவர்களே உயர்கல்விக்கு செல்கின்றனர். தங்கள் எதிர்காலத்திற்காக 12 ஆண்டுகள் பள்ளிக் கல்வி படித்த பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது கல்வி தளத்தில் அவர்களை பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி. நீட் நுழைவுத் தேர்வு வைக்கப்படுவதன் மூலம், மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்திற்கும் மறையாது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் தேர்வு ஆபத்தானது.

பதிவு செய்யுங்கள்

தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே ராஜன் அவர்கள் தலைமையிலான குழு நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடன் இணைந்து பயணிக்கிற அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக்கான பாதிப்புகளை முறையாக குழுவிடம் பதிவு செய்கிறது. நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய நீட் தேர்வின் பாதிப்பின் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்த வேண்டும். மாணவர்களும் அவர்தம் குடும்பங்களும் அனுபவிக்கிற துன்பங்களை நீதிபதி ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையிலான குழுவினருக்கு [email protected] என்னும் மின்னஞ்சலுக்கு வருகின்ற 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்றிணைந்து செயல்படுங்கள்

இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகளை கொண்ட நாட்டில் கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். அது ஒன்றே நிரந்தரத் தீர்வு. கல்வி மாநில உரிமை என்கிற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here