சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் இளவரசியின் தண்டனைக் காலம் முடிவடைவதால் அவர் நாளை விடுதலை ஆகிறார்.

தண்டனை

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதி குன்ஹா அளித்த சிறை தண்டனையை உறுதி செய்ததுடன், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா ரூ. 10 கோடியும் அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர்.

விடுதலை

இந்த நிலையில், கடந்த மாதம் 27-ந் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விடுதலைக்கு பின்னர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சசிகலா ஒருவாரம் தனிமைப்படுத்தப்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார். சசிகலாவின் உறவினர் இளவரசியின் தண்டனை காலம் முடிவடைவதால் அவர் நாளை விடுதலை ஆகிறார். காலை 10.30 மணி அளவில் சிறை அதிகாரிகள் உரிய ஆவணங்களில் கையெழுத்து பெற்று அவரை விடுவிக்கின்றனர். விடுதலை ஆனதும் இளவரசி சசிகலா ஓய்வெடுக்கும் விடுதிக்கு செல்கிறார். அங்கிருந்து 8-ந் தேதி சசிகலாவுடன் சேர்ந்து சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, சுதாகரன் அபராதத் தொகையை இன்னும் செலுத்தாததால், அவரது விடுதலை தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here