நடிகை சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.
விபரீத முடிவு
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந் தேதி சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தற்கொலை குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சித்ராவின் கணவர் ஹேம்நாத், சித்ராவின் தாய் – தந்தை, ஹோட்டல் ஊழியர்கள், இறுதியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஹேம்நாத்திடம் மட்டும் தொடர்ந்து 6 நாட்கள் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் ஹேம்நாத் மற்றும் சித்ராவுக்கு சொந்தமான செல்போன்களில் பதிவான தகவல்களை வைத்து விசாரணை நடத்தியதில், பல்வேறு தகவல்கள் வெளியானது. இதன் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்தனர்.
நிபுணர் குழு அறிக்கை
இதனையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை. தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. எந்தக் குற்றமும் செய்யாத தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டபின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும், சித்ரா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதி, வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை பிப்ரவரி 4-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.