வங்கக்கடலில் நாளை காலை ‘புரெவி’ புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘நிரெவி’

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 900 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது நாளை காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 2 ஆம் தேதி மாலை அல்லது இரவில் இலங்கையை கடந்து மன்னார் வளைகுடா வழியாக குமரிக்கடல் பகுதிக்கு நகரக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு ‘நிரெவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அதி கனமழை

இதன்காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பரவலாக மழை

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, வேதாரண்யம் தலா 4 செ.மீ., மயிலாடுதுறை 3 செ.மீ., நாகப்பட்டினம், குடவாசல் தலா 2 செ.மீ., திருவாடானை, மண்டபம், ராமேஸ்வரம், பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர், மதுரை மாவட்டம் பேரையூர் தலா 1 செ.மீ. மழை பதிவாயுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here