வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் மழைக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

பரவலாக மழை

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசாகவும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 10 செ.மீ., சேலம், பந்தலூர் தலா 5 செ.மீ., சோலையார், தஞ்சாவூர், சின்னக்கல்லார், சின்கோனா, மேல் பவானி, வால்பாறை, கோத்தகிரி, தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here